Published : 25 Jul 2021 03:15 AM
Last Updated : 25 Jul 2021 03:15 AM
ஈரோடு நகருக்குள் நுழையும் இடத்தில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையை புதுப்பித்துக் கட்ட வேண்டும் என்று ரயில்வே அமைச்சரிடம் ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்விடம் ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி டெல்லியில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். அதில், தமிழ்நாட்டில் மாநில நெடுஞ்சாலை எண்: 83 ஏ, ஈரோடு - தாராபுரம் சாலையுடன், கரூர் சாலையும் இணைந்து ஈரோடு நகருக்குள் நுழையும் இடத்தில் 1932-ம் ஆண்டு கட்டப்பட்ட ரயில்வே சுரங்கப் பாதை எண்:352, உயரம் குறைவாக இருக்கிறது. அந்தக் காலத்தின் போக்குவரத்துத் தேவைகளுக்கு ஏற்ப 3.5 மீட்டர் உயரமும், 6 மீட்டர் அகலமும் கொண்டதாகக் கட்டப்பட்டது.
ஆனால், தற்போது லட்சக்கணக்கான மக்கள் இந்த வழியைப் பயன்படுத்துகின்ற னர். கனரக ஊர்திகளின் போக்குவரத்து பெருகிவிட்டது. ஆனால், உயரம் குறைவாக இருப்பதால், கனரக ஊர்திகள், இந்த வழியாகச் செல்ல முடியவில்லை. திரும்பிச் செல்ல நேரிடுகிறது. அதனால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே, இந்தப் பாலத்தை உடனடியாகப் புதுப்பித்துக் கட்ட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப் பட்டுள்ளது. இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய ரயில்வே அமைச்சர் ரயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதால், விரைவில் இப்பணி தொடங்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT