Published : 25 Jun 2021 03:13 AM
Last Updated : 25 Jun 2021 03:13 AM
குழந்தைகள், மாணவ, மாணவிகள் ஆன்லைன் வகுப்புக்காக செல்போன்களை பயன்படுத்துவதால், தேவையற்ற வீடியோக்களை தவிர்க்க, பெற்றோருக்கு காவல்துறையினர் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், ஆன்லைன் மூலம் மாணவ, மாணவிகளுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் அனைத்து வகுப்பு மாணவ, மாணவிகளும் ‘ஸ்மார்ட்போன்’ பயன்படுத்த வேண்டிய அவசியம்ஏற்பட்டுள்ளது. இவ்வாறு செல்போன்களை பயன்படுத்தும்போது, விரும்பத் தகாத விளம்பரங்கள் வர வாய்ப்புள்ளன.
இதுபோன்றவற்றை தவிர்க்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக காவல்துறையினர் கூறும்போது, ‘‘பெற்றோர் தங்களது குழந்தைகளின் செல்போன் பயன்பாட்டை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஆன்லைன் வகுப்புகளுக்காக ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும்போது, கேம் ஸ்கேனர், டிஸ்கா, எம்.எக்ஸ் வீடியோ பிளேயர், இ.எஸ். பைல் மேனேஜர், யூ டியூப், கூகுள் குரோம் ஆகிய செயலிகளை உபயோகிக்கும் தேவை வரலாம். அவ்வாறு பயன்படுத்தும்போது, அடிக்கடி விரும்பத்தகாத விளம்பரங்களும் வரும்.
இதை தடுக்க, பெற்றோர் தங்களது குழந்தைகள் பயன்படுத்தும் ஸ்மார்ட்செல்போனின் பிளே ஸ்டோரில் சென்று செட்டிங்ஸில், பேரன்ட் கன்ட்ரோல் என்ற பட்டனை தொட்டு ஆன் செய்ய வேண்டும். அதன் கீழே உள்ள ஏப் அன்ட் கேம்ஸ் என்ற திரையை தொட்டு, தங்களின் குழந்தைகளின் வயதைப் பொறுத்து எண்களை கிளிக் செய்ய வேண்டும்.
அதைத் தொடர்ந்து, ப்லிம்ஸ் என்ற திரையை தொட்டு, ‘யு’ என்பதை தேர்வு செய்ய வேண்டும். யூடியூப் செட்டிங்ஸில் சென்று, ஜெனரல் பக்கத்தில் உள்ள ‘ரெஸ்ட்ரிக்சன் மோட்’ திரையை தொட்டு ஆன் செய்ய வேண்டும். இந்த முறைகளை செய்வதன் மூலம், குழந்தைகள் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் போது, தேவையற்ற விளம்பரம், முகம் சுழிக்கும் வீடியோக்கள் வராமல் தடுக்க முடியும்.
இதுதொடர்பாக அந்தந்த காவல்நிலையங்களின் மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT