Published : 14 Jun 2021 03:14 AM
Last Updated : 14 Jun 2021 03:14 AM

ஆம்பூர் அருகே விபத்து - பெங்களூரு பாதிரியார்கள் இருவர் உயிரிழப்பு :

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் டயர் வெடித்ததில் நிலை தடுமாறிய கார் விபத்துக் குள்ளானதில் பெங்களூருவைச் சேர்ந்த பாதிரியார்கள் இருவர் உயிரிழந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கிளி என்ற பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற கார் ஒன்று தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அவ் வழியாகச் சென்றவர்கள் விபத்தில் சிக்கிய காரில் இருந்த மூன்று பேரை மீட்டனர். தகவலின்பேரில் ஆம்பூர் கிராமிய காவல் துறை யினரும் விரைந்து சென்று விசாரித்தனர்.

அப்போது, மீட்கப்பட்டவர் களில் இருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. காரை ஓட்டி வந்த பாதிரியார் சாம்சன் (60) என்பவர் தலையில் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் இருந்தார். பின்னர், 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும், உயிரிழந்தவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரு கெட்டலஹள்ளி பகுதியில் இயங்கி வரும் டி.பி.எம் சீயோன் பெந்தகோஸ்தோ மிஷன் சபையின் மூத்த பாதிரியார்கள் விக்டர் மோகன் (65) மற்றும் தாவீது (60) என்பது தெரியவந்தது. விக்டர் மோகன், தாவீது, சாம்சன் ஆகிய மூவரும் சென்னையில் உயிரிழந்த பாதிரியார் ஒருவரின் துக்க நிகழ்வில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பும்போது காரின் பின்பக்க டயர் ஒன்று வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. ஓட்டுநராக இருந்த சாம்சனின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது.

இந்த விபத்து தொடர்பாக கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x