Published : 15 May 2021 03:13 AM
Last Updated : 15 May 2021 03:13 AM

கரோனா தொற்றாளர்களிடம் மருத்துவ உதவியாளர்கள் - கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்: அமைச்சர் கணேசன் :

கரோனா தொற்றாளர்களிடம் மருத்துவர்களும், செவிலியர்களும் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அறிவுறுத்தி உள்ளார்.

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசுக் கலைக் கல்லூரியில் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் மருத்துவர்களிடம் நோயாளிகளுக்கு அளிக்கும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார். மேலும் தொற்றாளர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்தார். பின்னர் அவர்களுக்கு பால், பிரட், பிஸ்கட் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழக முதல்வரின் ஆலோசனைப் படி கரோனா சிகிச்சை மையங்களில் ஆய்வு செய்து வருகிறோம். மேலும் மாவட்டத்தில் கரோனா தொற்று இல்லாத நிலையை உருவாக்கும் வகையில் அனைத்துத் துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து களப்பணியாற்றிட அறிவுறுத்தி வருகிறோம். முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பு உபகரணங்கள் தடையின்றி கிடைத்து வருகிறது. அவர்களும் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். மேலும் சிகிச்சையில் உள்ள நோயாளிகளிடம் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x