Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM

சாலை விரிவாக்கப் பணிக்காக - பொள்ளாச்சியில் காந்தி சிலை அகற்றம் :

பொள்ளாச்சியில் நடைபெறும் சாலை விரிவாக்கப் பணிக்காக நான்கு சாலை சந்திப்பில் இருந்த காந்தி சிலை தற்காலிகமாக அகற்றப்பட்டு சார்-ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள் ளது.

பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, உடுமலை, கோவை, பல்லடம், பாலக்காடு செல்லும் சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்இருந்து வரும் சரக்கு வாகனங்கள்போக்குவரத்து நெரிசலில் சிக்கா மல், எளிதாக நகரப்பகுதியை கடந்து செல்ல முடியும்.

தற்போது பாலக்காடு, கோவை,உடுமலை மற்றும் பல்லடம் சாலைகள் சந்திக்கும் காந்தி சிலை பகுதியில் ரவுண்டானா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் காந்தி சிலையை அகற்றும் பணி நடைபெற்றது. கிரேன் உதவியுடன் பீடத்தில் இருந்து பெயர்த்து எடுக்கப்பட்ட காந்தி சிலை, சார்-ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘பொள்ளாச்சி நகருக்கு 1934-ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி மகாத்மா காந்தியடிகள் வருகை தந்ததன் நினைவாக கடந்த 1985-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி நகரின் மத்தியப் பகுதியில் காந்திக்கு சிலை வைக்கப்பட்டது. 36 ஆண்டுகளாக பொள்ளாச்சி நகரின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்தது. எனவே, சாலை விரிவாக்கப் பணிகள் முடிந்த பின்னர் ரவுண்டானா பகுதியில் காந்தி சிலையை மீண்டும் வைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x