Published : 06 May 2021 03:13 AM
Last Updated : 06 May 2021 03:13 AM
கரோனா தொடர்பான ஜிப்மர் மருத்துவர்கள் பங்குபெறும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் இன்று முதல் தூர்தர்ஷனுடன் இணைந்து நடைபெறுகிறது.
இது குறித்து, ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரோனா தொடர்பான பொதுமக்களின் கேள்விகளுக்கு, விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஜிப்மர் மருத்துவர்கள் இன்று முதல் (6-ம் தேதி) தூர்தர்ஷனுடன் இணைந்து, தொடர்ச்சியான கலந்துரையாடல் மற்றும் நேரடி தொலைபேசி நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறும்.
இந்த நிகழ்ச்சிகளில் ஜிப்மரின் மூத்த மருத்துவப் பேராசிரியர்கள், பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.
இன்று கரோனா நோயாளிகளுக்கான உகந்த சிகிச்சை மற்றும் ஆக்ஸிஜன் தேவைகள் என்ற தலைப்பிலும், நாளை (மே.7) ‘கரோனா தடுப்பூசியின் அவசியம்’ என்ற தலைப்பிலும், 9-ம் தேதி ஜிப்மர் இயக்குநரும், மருத்துவ கண்காணிப்பாளரும் மற்றும் மருத்துவத்துறை மூத்த பேராசிரியர்களும் பங்குபெறும்,‘கரோனா வைரஸ் உருமாற்றங்களும், நோய்தொற்றும்’ என்ற தலைப்பில் விவாதிக்க உள்ளனர்.
தொடர்ந்து, அடுத்த வாரம் நிகழ்ச்சிகளில், ‘கரோனா தொற்றுநோயைத் தடுப்பதற்கான பழக்கவழக்கங்கள்’ என்ற தலைப்பில், 11-ம் தேதியும், ‘கரோனா தொற்றுநோய் காலகட்டங்களில் புற்றுநோய்க்கு சிகிச்சைஅளிப்பதில் உள்ள சவால்கள்’ என்ற தலைப்பில் 13-ம் தேதியும், மகப்பேறியல் பராமரிப்பு குறித்து 15-ம் தேதியும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
இதனைத் தொடர்ந்து 18-ம் தேதி, ‘குழந்தைகளின் உடல் நலமும் கரோனா நோய்தொற்றும்’ என்ற தலைப்பிலும், 20-ம் தேதி‘கரோனா நோயாளிகளுக்கான தீவிர சிகிச்சை மேலாண்மை’ குறித்து விவாதிக்கப்படும்.
இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT