Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

கரோனா பாதித்த பகுதியை - தனிமைப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் :

பாப்பநாயக்கன்பாளையத்தில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

கோவை

கோவையில் கரோனா பாதித்த பகுதியை மாநகராட்சியினர் தனிமைப்படுத்தும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை பாப்பநாயக்கன்பாளையம் அருகேயுள்ள பெருமாள் கோயில் வீதியில் ஒரே வீட்டில் வசிக்கும் இருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பாதிப்புக்கு உள்ளான பகுதியில் தடுப்புகள் அமைத்து, தனிமைப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ரேஸ்கோர்ஸ் போலீஸார், மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி, பொதுமக்கள் சென்று வரும் வகையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “பொதுமக்கள் மத்தியில் நோய் அதிகம் பரவாமல், கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மாநகராட்சி அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x