Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM

கோவை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட89 வயது முதியவர்

கோவை அரசு மருத்துவமனையில் 89 வயது முதியவர் ஒருவர் நேற்று கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

சுகாதாரப் பணியாளர்கள், காவல், வருவாய்த் துறையினர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு கோவை அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொதுமக்களில் 60 வயதுக்கும் மேற்பட்டோர், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, சிறுநீரகப் பாதிப்பு உள்ளிட்ட இணை நோய்கள் உள்ள 45 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசிபோடும் பணி நேற்று தொடங்கியது. இதில், முதல்நாளில் 158 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இதுகுறித்து அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறும்போது, “முதல்நாளில் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 132 பேரும், 45 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட 26 பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதில், அதிகபட்சமாக 89 வயது முதியவர் ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொண்டார். மக்களின் விருப்பத்துக்கு ஏற்பட கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளில் ஒரு தடுப்பூசி போடப்படுகிறது.

தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் பொதுமக்கள் ஆதார் அட்டையுடன், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பணிபுரியும் நிறுவன அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்துவர வேண்டும். மேலும், செல்போன் எண்ணையும் அளிக்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x