Published : 26 Feb 2021 03:15 AM
Last Updated : 26 Feb 2021 03:15 AM

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு வழக்கு ஆவணங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும் சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் 2019-ல் நடந்த குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கின் ஆவணங்களைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் 2019-ல் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை மாநிலம் முழுவதும் 16 லட்சம் பேர் எழுதினர். இதில் ராமேசுவரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் முதல் 100 இடங்களில் வெற்றி பெற்றனர். இத்தேர்வில் முறைகேடு நடந்துள்ளது.

இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து பலரை கைது செய்தனர். தனிப்படையினரும் விசாரித்து வருகின்றனர். சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மைகளை வெளிக்கொண்டு வர முடியும். எனவே, குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பான விசாரணையை சிபிசிஐடியிடம் இருந்து சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கே.நீலமேகம் வாதிட்டார்.

இதைத் தொடர்ந்து குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் கைப்பற்றிய ஆவணங்களைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும். இது தொடர் பாக தலைமைச் செயலர் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x