Published : 20 Feb 2021 03:17 AM
Last Updated : 20 Feb 2021 03:17 AM
கோவை புலியகுளம், கிணத்துக்கடவு, மதுக்கரை, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் 12,698 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசும்போது, "அதிமுக ஆட்சியில் கோவை மாவட்டத்தில் மட்டும் 5 அரசுக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வரின் சீரிய நடவடிக்கையால் கரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியமைக்கும்" என்றார்.
இதில், கடனுதவி, மாதாந்திர உதவித் தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, புதிய ரேஷன் கார்டுகள், தாலிக்கு தங்கம், இருசக்கர வாகனத்துக்கான மானியம் என மொத்தம் 12,698 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அம்மன் அர்ஜுனன், எட்டிமடை சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிகளுக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா பொள்ளாச்சி, கரியாஞ்செட்டிப்பாளையத்தில் நடைபெற்றது.
சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறை எம்எல்ஏ கஸ்தூரி வாசு, சார் ஆட்சியர் வைத்திநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், முதியோர் ஓய்வூதியம், இருசக்கர வாகன மானியம், இலவச வீட்டுமனைப் பட்டா, பேரிடர் நிவாரண நிதி, சலவைப்பெட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT