Published : 12 Feb 2021 03:18 AM
Last Updated : 12 Feb 2021 03:18 AM

திருநல்லூர் ஜல்லிக்கட்டில் 903 காளைகள் பங்கேற்பு 69 பேர் காயம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே திருநல்லூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 903 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதில் காளைகள் முட்டியதில் 69 பேர் காயமடைந்தனர்.

திருநல்லூரில் (தென்னலூர்) மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன் தலைமையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், திமுக இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் எம்.பழனியப்பன் உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதில், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 903 காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை அடக்குவதற்கு 200 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். இதில், காளைகள் முட்டியதில் 69 பேர் காயமடைந்தனர். இவர்களில் பலத்த காயமடைந்த 19 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் திமுக இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் எம்.பழனியப்பனும் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விராலிமலை தொகுதியில் ஒருவரையொருவர் எதிர்த்து போட்டியிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x