Published : 30 Jan 2021 03:15 AM
Last Updated : 30 Jan 2021 03:15 AM

பொய் வாக்குறுதிகளை அளிக்கும் திமுக சட்டப்பேரவை துணைத் தலைவர் குற்றச்சாட்டு

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சமத்தூர் ராம ஐயங்கார் மேல்நிலைப் பள்ளி, மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மண்ணூர் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் புரவிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி, பாலக்காடு சாலையில் உள்ள நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.

இதில், 1027 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் வழங்கினார். விழாவில், மாவட்டக் கல்வி அலுவலர் வெங்கடேசன், தலைமை ஆசிரியர்கள் வி.கோபாலகிருஷ்ணன், சொர்ண மணி, கோமதி, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் வி.கிருஷ்ணகுமார், நகர கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ். விஜயகுமார், வட்டாட்சியர் தணிகைவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர், சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, யாராலும் நிறைவேற்ற முடியாத, பொய்யான வாக்குறுதிகளைக் கூறினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். நகைக் கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்து, மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றனர், தற்போது, அதேபோல கூட்டங்களை நடத்தி, மனுக்களைப் பெற்று, அவற்றை 100 நாட்களில் நிறைவேற்றப் போவதாக அறிவித்து இருக்கிறார். இதை மக்கள் நம்ப மாட்டார்கள்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x