Published : 19 Jan 2021 06:51 AM
Last Updated : 19 Jan 2021 06:51 AM

முளைத்த மக்காச்சோளத்துடன் நிவாரணம் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்ட விவசாயிகள்

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் சரடமங்கலம் மற்றும் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் நேற்று காய்ந்த மக்காச்சோள செடிகள் மற்றும் முளைத்த மக்காச்சோளப் பயிர்கள் ஆகியவற்றுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர்.

முன்னதாக, அவர்கள் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறும்போது, “லால்குடி வட்டத்தில் சரடமங்கலம், சாதூர்பாகம், கண்ணனூர், தாப்பாய், நெற்குப்பை, மால்வாய், சிறுகளப்பூர் உள்ளிட்ட சுற்றுப் பகுதி கிராமங்களில் கடந்த அக்டோபரில் 700 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டோம்.

ஏற்கெனவே போதிய பருவமழை இல்லாத காரணத்தால் பாதி பயிர்கள் செடிகள் காய்ந்துவிட்டன.

இதனிடையே, முளைத்திருந்த மக்காச்சோளப் பயிர்கள் அதிக மழையால் சாய்ந்து, முளைத்துவிட்டன. இதனால், ஏக்கருக்கு ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை செலவழித்த விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பு நேரிட்டுள்ளது.

எனவே, பயிர் சேத பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தி, உரிய நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும்’’ என்றனர்.

திருச்சி- புதுக்கோட்டை சாலையில் கோளரங்கம் எதிரேயுள்ள குடியிருப்புகளைச் சேர்ந்த திரளான பெண்கள் உள்ளிட்டோர் அளித்த மனுவில், “விமான நிலையத்துக்கு அருகே திருச்சி- புதுக்கோட்டை சாலையோரம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம்.

இந்தநிலையில், விமான நிலைய விரிவாக்கத்துக்காக குடியிருப்புகளை 15 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

எங்களுக்கு மாற்று இடம் அளிக்காமல், அங்கிருந்து காலி செய்யக் கூடாது’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x