Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM

திருச்சி மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் இல்லை: ஆட்சியர் சிவராசு தகவல்

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் இதுவரை பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படவில்லை என மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று கூறியது:

திருச்சி மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் இதுவரை எங்கும் ஏற்படவில்லை. எனவே, நன்கு சமைத்த கோழிக் கறி மற்றும் முட்டைகளை பொதுமக்கள் தைரியமாக சாப்பிடலாம். ஒரு வேளை நாம் வாங்கும் கோழிக் கறியில் நோய்க்கிருமி இருந்தாலும், சமைக்கும்போது அழிந்துவிடும். அதாவது, 70 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையிலேயே பறவைக் காய்ச்சல் நோய்க் கிருமி அழிக்கப்பட்டு விடும்.

முழுக் கோழியை அப்படியே சமைத்தால் கோழி உடலின் அனைத்து பாகங்களிலும் உரிய வெப்ப நிலை எட்டாமல் போய்விட வாய்ப்பு உள்ளது. எனவே, முழுக் கோழியை சமைத்து சாப்பிடுவதை தவிர்க்கலாம். குறிப்பாக, அரை வேக்காட்டில் சமைத்த கோழிக் கறி மற்றும் பச்சை முட்டை, ஆஃப் பாயில் ஆகியவற்றை சாப்பிடக் கூடாது. எனவே, பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளும்போது, கோழிப் பண்ணை உரிமையாளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒத்துழைப்பு அளிக்காவிடில் சம்பந்தப்பட்ட கோழிப் பண்ணை உரிமையாளர்கள் மீது மாவட்ட நிர்வாகத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x