Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM

ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் தொடக்கம்

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி, ராமேசுவரம் விசைப் படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நேற்று தொடங்கினர்.

ராமேசுவரத்தைச் சேர்ந்த கிருபை என்பவரது விசைப் படகில் கிருபை, வளன் கவுசிக், மிக்கேயாஸ், கினிங் ஸ்டன், சாம் ஸ்டில்லர், நிஜான், பிரைட்டன், இஷோக், மாரி ஆகிய 9 மீனவர்கள் கச்சத்தீவு கடல் பகுதியில் சனிக்கிழமை இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி சிறை பிடித்தனர்.

இந்நிலையில் இலங்கை கடற்படை சிறைபிடித்த 42 மீனவர்களையும், அவர்களது 6 படகுகளையும் விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் ராமேசுவரம் மீன் பிடித் துறைமுகத்தில் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் ஆழமற்ற பகுதிகளில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x