Published : 06 Jan 2021 03:15 AM
Last Updated : 06 Jan 2021 03:15 AM

நிதி நிறுவனத்தில் ரூ.2.25 லட்சம் துணிகர திருட்டு

ஆம்பூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2.25 லட்சம் திருடுபோனது தொடர்பாக பங்குதாரர்கள் மற்றும் ஊழி யர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியைச் சேர்ந்தவர் பஞ்ச மூர்த்தி(52). இவர், மாதனூர் - ஒடுக்கத்தூர் சாலையில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிதி நிறுவனத்தில் 9 பேர் பங்கு தாரர்களாக உள்ளனர். 3 சக்கர வாகனங்கள், இரு சக்கர வாகனங்களுக்கு மாதக்கடன் திட்டத்தில் வட்டிக்கு கடன் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் பஞ்சமூர்த்தி நிதி நிறுவனத்தை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை 10 மணியளவில் நிதி நிறுவன அலுவலகத்தை திறந்த போது, அங்கு வைக்கப் பட்டிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் நேற்று அவர் புகார் செய்தார். அதன்பேரில், காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x