Published : 16 Dec 2020 03:15 AM
Last Updated : 16 Dec 2020 03:15 AM
கோவை மாவட்டத்தில் உள்ள 1,440 ரேஷன் கடைகள் மூலம் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள், அத்தியாவசியப் பொருட்களைப் பெற்று வருகின்றனர். கடந்த அக்டோபர் மாதம் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்’ மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு, பயோ மெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
ஒருநாளைக்கு சராசரியாக 200 பேருக்கு உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வந்த நிலை மாறி, சுமார் 60 பேருக்கு மட்டுமே விநியோகிக்க முடிந்தது. இதையடுத்து, ரேஷன் கடைகளில் பயோ-மெட்ரிக் முறை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. அதேசமயம், `ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்துக்காக மென்பொருளை மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. பின்னர், மாவட்டத்தில் உள்ள 5 வட்டங்களில் தலா ஒரு கடையில், சோதனை அடிப்படையில் இந்த முறை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து கோவை மாவட்ட உணவு வழங்கல் அலுவலர் குமரேசன் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘மேம்படுத்தப்பட்ட மென்பொருள் சோதனை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்’ மூலம் பயோ-மெட்ரிக் முறையில் உணவுப் பொருட்கள் விநியோகிக்கும் முறை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் நேற்று முதல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த முறை மூலம் அதிகபட்சமாக ஒருவருக்கு 2 முதல் 3 நிமிடங்களில் உணவுப் பொருட்களுக்கான பில் வழங்கப்பட்டு, அடுத்த சில நிமிடங்களில் பொருட்கள் வழங்கப்படும். ஸ்மார்ட் குடும்ப அட்டையில் உள்ளவர்கள் மட்டுமே, அந்த அட்டையைப் பயன்படுத்தி பொருட்களைப் பெற முடியும். வெளி மாநிலம், வெளியூர்களைச் சேர்ந்தவர்கள், குடிபெயர்ந்தவர்கள் தங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டைப் பயன்படுத்தி, எந்த ரேஷன் கடைகளில் வேண்டுமானலும் உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும்,’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT