Published : 15 Dec 2020 03:14 AM
Last Updated : 15 Dec 2020 03:14 AM
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அகில இந்திய விவசாயிகள் சங்க போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று இப்போராட்டம் நடைபெற்றது.
போராட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் சு.பழனிசாமி தலைமையில், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் நிர்வாகிகள், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க நிர்வாகிகள், மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, மக்கள் அதிகாரம் அமைப்பு உள்ளிட்ட கட்சி மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகளின் நிர்வாகிகள், விவசாயிகள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமர்ந்து போராடிய விவசாயிகளை, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் கைது செய்தனர்.
ஒருங்கிணைப்புக் குழுவின் கோவை மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும். இதற்கு அனைத்து அரசியல் கட்சியினர், விவசாய அமைப்புகளின் ஆதரவு பெறப்படும். மேலும், விரைவில் ஆர்ப்பாட்டம் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டமும் நடத்தப்படும்’’ என்றார்.
இதேபோல, வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அஞ்சல் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் பி.ஆர்.அருள்மொழி தலைமையிலான வழக்கறிஞர்கள் நீதிமன்றம் அருகிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலையில் உள்ள அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
ரயில் மறியல் முயற்சி
மனிதநேய மக்கள் கட்சியின் கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் ஜெம் பாபு தலைமையிலான கட்சியினர், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். கோவை ரயில் நிலையத்துக்குள் நுழைய முயன்ற அக்கட்சியினரை போலீஸார் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, ரயில் மறியலில் ஈடுபட முயன்றதாக 70-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT