Published : 03 Dec 2020 03:16 AM
Last Updated : 03 Dec 2020 03:16 AM

வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் மாணவர் உட்பட 2 பேர் உயிரிழப்பு

வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் மாணவர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (45). இவரது மகன் பூபதி (14). வாலாஜா பகுதி யில் உள்ள அரசுப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர், வாலாஜாவில் இருந்து இரு சக்கர வானத்தில் சென்று கொண்டிருந்தார்.

ஐய்யப்பன் கோயில் அருகே சென்றபோது தனியார் பேருந்து ஒன்று இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே பூபதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுறித்து வாலாஜா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

ஆந்திர மாநிலம் குப்பம் அடுத்த சின்னகாரம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் காதர் மகன் பாஷா (32). இவர், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் டிராலி மேனாக பணியாற்றி வந்தார். குப்பத்தில் இருந்து தினசரி இரு சக்கர வாகனத்தில் பணிக்கு வந்து செல்வது வழக்கம்.

அதன்படி, நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து பாஷா இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். நாட்றாம்பள்ளி தேசிய நெடுஞ்சாலை அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் தடுப்பு கம்பியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பாஷா படுகாயமடைந்தார்.

இதையடுத்து, அங்கு வந்த நாட்றாம்பள்ளி காவல் துறையினர் பாஷாவை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பாஷா உயிரிழந்தார்.

இதுகுறித்து நாட்றாம்பள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாரி ஓட்டுநர் படுகாயம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து வேலூர் நோக்கி அரசுப் பேருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. அதிகாலை 2.50 மணிக்கு நாட்றாம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்துக்கொண்டிருந்த போது, பின்னால், வந்த லாரி அரசுப் பேருந்தின் பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில், லாரியின் முன்பக்கம் முழுமையாக சேதமடைந்தது. லாரி ஓட்டுநரான ஆற்காடு பகுதியைச் சேர்ந்த ஜோதிகுமார் (36) என்பவர் படுகாயமடைந்தார். பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்த நாட்றாம்பள்ளி காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து லாரி ஓட்டுநரை மீட்டு நாட்றாம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x