Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM

இறப்பு விகிதம் குறைவு, உள்கட்டமைப்பு வசதிக்காக கோவை அரசு மருத்துவமனையின் பச்சிளங் குழந்தைகள் பிரிவுக்கு முதல் பரிசு சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழங்கினார்

மாநில சுகாதாரத் துறை சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பாக செயல்பட்டுவரும் பச்சிளங் குழந்தைகள் பிரிவுகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

இதில், கோவை அரசு மருத்துவமனையின் பச்சிளங் குழந்தைகள் பிரிவுக்கு 2019-20-ம் ஆண்டுக்கான முதல் பரிசை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழங்கினார். பரிசைப் பெற்றுக்கொண்ட குழந்தைகள் பிரிவு துறைத் தலைவர் டாக்டர் பூமா கூறியதாவது:

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே பிறந்து, அங்குள்ள பச்சிளங் குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை, வெளி மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை, அனுமதிக்கப்படும் குழந்தைகளில் குறைவான எடையுடன், குறைப் பிரசவத்துடன் அனுமதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் பரிசு வழங்கியுள்ளனர்.

கோவை அரசு மருத்துவமனையில் 1 கிலோ முதல் 1.50 கிலோ வரை எடையுடன் 2019 ஜூன் முதல் 2020 ஜூன் வரை அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 95 சதவீத குழந்தைகளும், 1 கிலோவுக்கு கீழ் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 85 சதவீதம் பேரும் நலமுடன் வீடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படும் குழந்தைகளின் உடல்நலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதோடு, முறையாக தடுப்பூசிகளும் போடப்படுகின்றன. பச்சிளங் குழந்தைகள் இறப்பு விகிதத்தை 2030-ம் ஆண்டில் எவ்வளவு குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்ததோ அந்த இலக்கை இப்போதே நாங்கள் அடைந்துள்ளோம். பிறந்து 30 நாட்களுக்குள் இங்கு அனுமதிக்கப்படும் 1,000 பச்சிளங் குழந்தைகளில் 5 குழந்தைகள் மட்டுமே உயிரிழக்கின்றன. அதேபோல, ஒரு வயதுக்குட்பட்ட 1,000 குழந்தைகளில் 11 குழந்தைகள் உயிரிழக்கின்றன. இதை ஒற்றை இலக்கமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை மருத்துவக் கல்லூரியைவிட கோவையில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. இங்கு சிகிச்சை அளிப்பதற்காக நவீன வென்டிலேட்டர்கள், டிஜிட்டல் எக்ஸ்-ரே கருவிகள் உள்ளிட்டவை உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

பரிசு கிடைத்தமைக்காக குழந்தைகள் பிரிவில் பணியாற்றும் டாக்டர்கள் சசிகுமார், செந்தில்குமார், சத்தியன், உறுதுணையாக இருந்த செவிலியர்களுக்கு கோவை அரசு மருத்துவமனையின் டீன் காளிதாஸ் நேற்று நேரில் பாராட்டு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x