Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM
வேலூர்: வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவுடி ஜானி, திடீரென கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி வண்டறந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானி என்ற ஜானி பால்ராஜ் (33). கொலை, ஆள் கடத்தல், பணம் கேட்டு மிரட்டல் என 40-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர். காட்பாடி, விருதம்பட்டு, வேலூர் வடக்கு காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு தலைமறைவானார். அதன் பிறகு அவரை பிடிக்க முடியவில்லை. காவல் துறையினருக்கு சவாலாக மாறிய ரவுடி ஜானியை பிடிக்க வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் மேற்பார்வையில் புதிய தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இதற்கிடையில், பெங்களூருவில் பதுங்கி இருந்த ஜானி மற்றும் அவரது மைத்துனர் மைக்கேல் (30) ஆகியோரை காவல் துறையினர் கடந்த வாரம் சுற்றிவளைத்து கைது செய்தனர். காவல் துறையினர் பிடியில் இருந்து இருவரும் தப்பிக்க முயன்று கீழே விழுந்ததில் இருவருக்கும் கை, கால்களில் முறிவு ஏற்பட்டது. வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
காட்பாடியில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி ஜானியை, திடீரென கடலூர் மத்திய சிறைக்கு மாற்றியுள்ளனர். காவல் துறையினர் பரிந்துரையின்பேரில் அவர் மாற்றப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT