Published : 30 Oct 2020 03:13 AM
Last Updated : 30 Oct 2020 03:13 AM

மு.க.ஸ்டாலின், உதயநிதியை கண்டித்து கோவையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

தமிழக முதல்வர், துணை முதல்வர், உள்ளாட்சித் துறை அமைச்சர் மற்றும் தமிழக அரசு குறித்து அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருவதாக கூறி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகி யோரை கண்டித்து, கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. கோவை தெற்கு தாலுகா அலுவலகம், கணபதி, வடவள்ளி, துடியலூர், குனியமுத்தூர், ராமநாதபுரம், பீளமேடு உள்ளிட்ட 28 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு தாலுகா அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ஜூனன் எம்.எல்.ஏ, கணபதியில் மாவட்டச் செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ, துடியலூரில் வி.சி.ஆறுக்குட்டி எம்.எல்.ஏ ஆகியோர் தலைமைவகித்து பேசினர்.

அம்மன் அர்ஜூனன் எம்.எல்.ஏபேசும்போது, ‘‘கோவைக்கு தேவையான வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்ததால், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை குறிவைத்து திமுகவினர் அவதூறாக பேசுகின்றனர். சுவரொட்டி விவகாரத்தில் அதை ஒட்டியவர்களை கேட்காமல்,அமைச்சர் மீது குற்றம்சாட்டுகின் றனர்’’ என்றார்.

இந்த ஆர்ப்பாட்டங்களில், அதிமுக ஆட்சிக்காலத்தில் செயல் படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும், திமுக முன்னணி தலைவர்கள், நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு கள் குறித்தும் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினர் கருப்புச்சட்டை அணிந்து, திமுகவின் ஊழல்கள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி கோஷமிட்டனர். இதில்ஏராளமானோர் கலந்து கொண்ட னர். கோவை குனியமுத்தூர் பகுதி அதிமுக சார்பில், சுகுணாபுரத்தில் கருப்புச்சட்டை அணிந்து நேற்றுகண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில் பகுதி கழக செயலாளர் மதனகோபால், டிவிஷன் கழக செயலாளர் எ.செல்லப்பன், சுகுமார், செல்லாபாய், ஜெயராமன், புஷ்பராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வடவள்ளி பகுதிக் கழகம் சார்பில், வடவள்ளியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் சந்திரசேகர், மாவட்டப் பொருளாளர் பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும், வடவள்ளி, மருதமலை, பி.என்.புதூர், சீரநாயக்கன்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த அதிமுகவினர் தங்களது வீடுகளின் முன்பு கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x