Published : 14 Oct 2021 05:54 AM
Last Updated : 14 Oct 2021 05:54 AM

ஷாருக் மகன் ஆர்யன் உள்ளிட்டோருக்கு : ஜாமீன் வழங்க என்சிபி கடும் எதிர்ப்பு :

மும்பை: கடந்த 2-ம் தேதி மும்பை அருகே சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் உள்ளிட்ட 8 பேரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி)அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களை 3 நாள் என்சிபி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. என்சிபி காவல் முடிவுக்கு வந்ததையடுத்து, அவர்களை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து ஆர்யன் சார்பில் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்ய என்சிபிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்யன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அமித் தேசாய் சுமார் ஒன்றரை மணி நேரம் வாதாடினார். அப்போது, ஆர்யனிடமிருந்து போதைப்பொருள் கைப்பற்றப்படவில்லை. அதை வாங்குவதற்கு அவரிடம் பணம் இல்லை என தேசாய் தெரிவித்தார்.

முன்னதாக என்சிபி சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், “ஆர்யன் கான் போதைப்பொருள் வாங்கி உள்ளார். மேலும் வெளிநாட்டில் உள்ள சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த சிலருடன் தொடர்பில் ஆர்யன் இருந்துள்ளார். எனவே, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவருக்கும் தொடர்பு இருப்பதை மறுக்க முடியாது. இந்த சதியில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் தெளிவாக உள்ளது. எனவே இவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது” என கூறப்பட்டுள்ளது.

ஜாமீன் மனு மீதான விசாரணை இன்றும் தொடர்ந்து நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x