Published : 10 Oct 2021 03:15 AM
Last Updated : 10 Oct 2021 03:15 AM
கடந்த ஆண்டு மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக்கின் பல்வேறு முனைகளில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். கடந்த ஆண்டு ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 50 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க, ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்திய, சீன ராணுவ உயரதிகாரிகள் இதுவரை 12 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். இதன்காரணமாக லடாக் எல்லையில் இருதரப்பும் படைகளை குறைத்துள்ளன.எனினும் லடாக் எல்லையில் சீனவீரர்களும் ஆயுதங்களும் குவிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில்இந்திய, சீன ராணுவ உயரதிகாரிகளின் 13-வது சுற்று பேச்சுவார்த்தை சீனாவின் மோல்டா பகுதியில் இன்று நடைபெறுகிறது. இதில் லடாக்கின் ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவானே நேற்று கூறும்போது, “லடாக் எல்லையில் சீனா படைகளை குவித்திருப்பதும் உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதும் கவலை அளிப்பதாக உள்ளது. ஆனால், நமது பகுதியிலும் சீனாவுக்கு நிகராக நமது வீரர்களும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT