Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM
கரோனாவுக்கு எதிரான போரை பலவீனப்படுத்த வேண்டாம் என்று சோனியா காந்திக்கு ஜே.பி. நட்டா கடிதம் எழுதியுள்ளார்.
காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பேசிய கட்சியின் தலைவர் சோனியா காந்தி, ‘‘மருத்துவ வல்லுநர்கள் கரோனா 2-வது அலை வரும் என எச்சரிக்கை விடுத்தும் மோடி அரசு அதை புறக்கணித்து மிகப்பெரிய பேரழி வுக்கு வழிவகுத்துள்ளது’’ என்று குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கரோனா வைரஸுக்கு எதிரான போரை தீவிரப்படுத்தி வருகிறது. அனைத்து மாநில முதல்வர்களுடனும் பிரதமர் ஆலோசனை நடத்தி அதற்கேற்ப முக்கிய நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். ஏழைகளின் நலனுக்காக அவர்களுக்கு பொதுவிநியோக திட்டத்தில் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் ஆரம்பம் முதலே கரோனா வைரஸுக்கு எதிரான போரை பலவீனப்படுத்தி வருகின்றனர். முதலில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பினர்.
கடந்த முறை கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல் செய்யப்பட்டபோது ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இப்போது அவரே ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
கரோனாவுக்கு எதிராக சுகாதாரபணியாளர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர். ஆனால் அவர்களின் சேவையை காங்கிரஸ் விமர்சித்து வருகிறது. கரோனா வைரஸுக்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் போரிட்டு வருகிறது. இந்த போரை பலவீனப்படுத்த வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT