Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM

உயிரிழக்கும் நோயாளிகளை எரியூட்டுவதில் சிக்கல் - உ.பி. கங்கையில் மிதக்கும் உடல்கள் :

பிஹாரை தொடர்ந்து உத்தர பிரதேச கங்கை நதியில் உடல்கள் மிதப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவை கரோனா நோயாளிகளின் உடல்கள் என்று கூறப்படுகிறது.

உத்தர பிரதேசத்தில் நாள்தோறும் 20,000 முதல் 30,000 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுவருகிறது. தினசரி 300 பேர் உயிரிழக்கின்றனர். அவர்களில் சிலரின்உடல்கள் கங்கை நதியில் வீசப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

உத்தர பிரதேச எல்லையில் அமைந்துள்ள பிஹாரின் பக்சர் மாவட்ட கங்கை நதியில் நேற்று முன்தினம் உடல்கள் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 150 முதல் 500 உடல்கள் மிதந்து சென்றதாக நேரில் பார்த்த சாட்சிகள் தெரிவித்தனர்.

பக்சர் மாவட்ட அதிகாரிகள் கூறும்போது, ‘‘கங்கையில் மிதக்கும் உடல்களை மீட்டு எரியூட்டி வருகிறோம். உடல்களை நதியில்வீசும் வழக்கம் பிஹாரில் கிடையாது. உத்தர பிரதேசத்தின் வாரணாசி உள்ளிட்ட பகுதிகளில் கங்கையில் வீசப்படும் உடல்கள் பிஹாருக்கு அடித்து வரப்படுகின்றன’’ என்றனர்.

71 உடல்கள் மீட்பு

பக்சர் மாவட்ட போலீஸ் எஸ்.பி.நீரஜ் குமார் சிங் கூறும்போது, ‘‘கங்கை நதியில் இருந்து இதுவரை 71 உடல்களை மீட்டுள்ளோம். அவை அழுகிய நிலையில் இருப்பதால் நதிக் கரையோரம் பிரேத பரிசோதனை நடத்தினோம்’’ என்றார்.

உள்ளூர் வியாபாரி ராம் அஸ்ரே யாதவ் கூறும்போது, ‘‘கங்கை நதியில் இருந்து மீட்கப்படும் உடல்கள் ஜேபிபி இயந்திரம் மூலம் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு புதைக்கப்படுகிறது’’ என்றார்.

இந்நிலையில் உத்தர பிரதேசத்தின் காஜிபுர் பகுதி கங்கை நதியில்உடல்கள் மிதப்பது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம்.பி. சிங்கூறியபோது, ‘‘காஜிபுர் கங்கைநதியில் உடல்கள் மிதப்பதாகதகவல் கிடைத்துள்ளது. சம்பவபகுதிக்கு அதிகாரிகள் சென்றுள்ளனர். இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.

காஜிபுர் பகுதி மக்கள் கூறும்போது, ‘‘உயிரிழந்தவர்களின் உடல்களை எரிப்பது அல்லது கங்கை நதியில் வீசுவது உத்தர பிரதேச மக்களின் வழக்கம். கரோனா நோயாளிகளின் உடல்களை எரியூட்டுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுவதால், கங்கை நதியில் வீசி செல்கின்றனர். கரையோரம் மிதக்கும் உடல்களை நாய்கள் கடித்து குதறுகின்றன. இதனால் வைரஸ் பரவும் அபாயம் எழுந்துள்ளது’’ என்றனர்.

மத்திய அமைச்சர் அறிவுரை

மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘‘பிஹார் கங்கை நதியில்உடல்கள் மிதந்தது துரதிருஷ்டவசமானது. இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும். அன்னை கங்கையின்தூய்மையைப் பாதுகாக்க மத்தியஅரசு உறுதி பூண்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x