Published : 03 May 2021 03:15 AM
Last Updated : 03 May 2021 03:15 AM

வரலாறு படைக்கும் முதல்வர் பினராயி விஜயன் - கேரளாவில் தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியமைக்கும் இடதுசாரி ஜனநாயக கூட்டணி :

கேரளாவில் உள்ள 140 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக கூட்டணிக்கும் (எல்டிஎஃப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கும் (யுடிஎஃப்) கடும் போட்டி நிலவியது. தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டது.

இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. மொத்தமுள்ள 140 இடங்களில் நேற்றிரவு நிலவரப்படி 99 இடங்களில் இடதுசாரி ஜனநாயக முன்னணியும், 41 இடங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் முன்னிலையில் இருந்தன. மெஜாரிட்டி பெற 71 இடங்கள் தேவை என்ற நிலையில் 99 இடங்களில் இடதுசாரிகள் ஜனநாயக முன்னணி முன்னிலையில் உள்ளது. இதன்மூலம் இடதுசாரி கூட்டணி தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியமைக்கும் வரலாற்று சாதனையை முதல்வர் பினராயி விஜயன் படைக்க உள்ளார்.

பினராயி விஜயனே மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தர்மடம் தொகுதியில் முதல்வர் பினராயி விஜயன் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

கேரள முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி புதுப்பள்ளி தொகுதியில் வெற்றி பெற்றார்.

அதே நேரத்தில் கடந்த தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றிருந்த பாஜக இந்த தேர்தலில் அனைத்துஇடங்களிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. பாஜக வேட்பாளரும், முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டவருமான மெட்ரோமேன் தரன் பாலக்காடு தொகுதியில் போட்டியிட்டார். அவர் காங்கிரஸ் வேட்பாளர் ஷபி பரம்பிலிடம் 3,859 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்விகண்டார். கடந்த 2016 தேர்தலில் நேமம்தொகுதியில் மட்டும் பாஜக வெற்றி பெற்றிருந்தது. இம்முறை வாக்கு எண்ணிக்கையின்போது 3 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் இருந்தது. ஆனால் அடுத்தடுத்த சுற்றுகளில் பாஜக வேட்பாளர்கள் பின்தங்கி தோல்வி கண்டனர்.

கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா மாத்தனூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “விரைவில் எல்டிஎஃப் எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெறும். நாளை பதவியேற்பு விழா நடைபெறாது. நான் திருவனந்தபுரம் சென்றதும் ஆலோசனை நடத்திய பின்னர் பதவியேற்பு விழா நடைபெறும். கடந்த 5 ஆண்டுகால எங்கள் ஆட்சியை மக்கள் அங்கீகரித்துள்ளனர். மதித்து வாக்களித்துள்ளனர். எங்களின் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற தொடர்ந்து இடதுசாரிகள் அரசு ஆட்சியில் இருக்க மக்கள் வாய்ப்பளித்துள்ளனர். மக்கள் மதச்சார்பின்மையைக் காக்க வாக்களித்துள்ளனர்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x