Published : 11 Mar 2021 03:12 AM
Last Updated : 11 Mar 2021 03:12 AM

நந்திகிராமில் வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு - மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல் :

மேற்கு வங்க மாநிலம் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட, முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித்தலைவருமான மம்தா நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மேற்கு வங்க மாநிலத்தில் மார்ச்27-ம் தேதி தொடங்கி 8 கட்டங்களாகசட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் திரிணமூல்காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தாவின் நம்பிக்கையைபெற்ற சுவேந்து அதிகாரி, சமீபத்தில் கட்சியில் இருந்து விலகி பாஜக.வில் சேர்ந்தார். நந்திகிராம் தொகுதியில் பாஜக சார்பில் சுவேந்து போட்டி யிடுகிறார்.

இந்நிலையில், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட மம்தா பானர்ஜி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். ஹால்டியாவில் உள்ள துணை மண்டல அலுவலகத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். அப்போது திரிணமூல் கட்சித் தலைவர்சுப்ரதா பக் ஷி உடன் இருந்தார். முன்னதாக வேட்பு மனு தாக்கல்செய்ய 2 கி.மீ. தூரம் நடந்து சென்றார் மம்தா. அப்போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உடன் சென்றனர். நந்திகிராமில் நேற்று மனு தாக்கல் செய்துவிட்டு காரில்ஏற முயன்றபோது நான்கைந்து பேர் சூழ்ந்து கொண்டு தாக்கினர்.

இதுகுறித்து மம்தா கூறும்போது,“நான்கைந்து பேர் சூழ்ந்து கொண்டு என்னைத் தள்ளிவிட்டனர். இதில் என் காலில் காயம் ஏற்பட்டது. அப்போது என்னைச் சுற்றி போலீஸாரே இல்லை. எனது காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இது ஒரு சதித் திட்டமாகவே இருக்க கூடும்” என்றார்.

மர்ம நபர்கள் தள்ளியதால் முதல்வர் மம்தா நடக்க முடியாமல் சிரமப்பட்டார். அவரை பாதுகாப்பு அதிகாரிகள் தூக்கி வந்து காரில் உட்கார வைத்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

நந்திகிராமில் மம்தா வேட்பு மனுதாக்கல் செய்தது குறித்து, சுவேந்து அதிகாரி நேற்று கூறியதாவது:

நந்திகிராம் தொகுதிக்கும் மம்தாவுக்கும் தொடர்பு இல்லை. அவர் வேறு ஊரைச் சேர்ந்தவர். இந்தத் தொகுதியில் அவர் ஒரு முறை கூட வாக்களித்தது இல்லை. இந்த மண்ணின் மைந்தனான. நான் இங்குதான் தொடர்ந்து வாக்களித்து வருகிறேன்.

மேற்கு வங்கத்தில் சீட்டு நடத்திய கம்பெனிகள் பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான பணத்தை வசூலித்து மோசடி செய்துள்ளன. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அரசு மற்றும் அதன்தலைவர்களால்தான் பொதுமக்கள் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இங்கு பாஜக ஆட்சிக்கு வந்தால், அந்தப் பணம் பொதுமக்களுக்கு திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சுவேந்து அதிகாரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x