Published : 03 Mar 2021 03:23 AM
Last Updated : 03 Mar 2021 03:23 AM

தடுப்பூசி செலுத்தி கொண்ட மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கரோனா தடுப்பூசியை நேற்று செலுத்திக் கொண்டார்.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் முன்களப் பணியாளர்கள், சுகாதார ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதன்படி, நாடு முழுவதும் 1.40 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

இந்த சூழலில், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 45 வயதை கடந்த இணை நோய் உள்ளவர் களுக்கும் கரோனா தடுப்பூசியை செலுத்தும் இயக்கம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதல் நபராக, பிரதமர் மோடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு சென்று கோவேக்சின் தடுப்பு மருந்தை செலுத்திக் கொண்டார்.

இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், அவரது மனைவி நூதன் கோயல் ஆகியோர் டெல்லியில் உள்ள இதயம் மற்றும் நுரையீரல் சிகிச்சை மையத்துக்கு சென்று கோவேக்சின் தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். அது தனியார் மருத்துவமனை என்ப தால் இருவரும் தலா ரூ.250 வழங்கி தடுப்பூசிகளை போட்டுக் கொண்டனர். இதையடுத்து, 30 நிமிட மருத்துவக் கண்காணிப்புக்கு பிறகு அவர்கள் வீடு திரும்பினர்.

முன்னதாக, ஹர்ஷ்வர்தன் கூறுகையில், “கரோனா தடுப்பூசி களானது நமக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதம். இதனை தகுதி உடைய அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும். இன்று (நேற்று) காலை 9.30 மணி நிலவரப்படி 39 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தடுப்பூசிக்காக கோ-வின் செயலியில் பதிவு செய்துள்ளனர்" என்றார்.

மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, தேசிய மாநாடு கட்சி எம்.பி. பரூக் அப்துல்லா ஆகியோரும் நேற்று கரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இதனிடையே, ஆந்திர மாநில ஆளுநரான பிஸ்வபூஷண் ஹரிச்சந்தன் தனது மனைவியுடன் விஜயவாடாவில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

அதன் பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “கரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்திக்கொண்டு நம்மையும், நமது சமூகத்தையும் பாதுகாக்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x