Published : 12 Feb 2021 03:16 AM
Last Updated : 12 Feb 2021 03:16 AM

திருப்பதியில் ரூ.300 தினசரி சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட் 25 ஆயிரம் ஆக அதிகரிப்பு

திருமலை: கரோனா பரவலை தடுப்பதற்காக திருப்பதி ஏழுமலையான் கோயில் உட்பட நாடு முழுவதும் உள்ள கோயில்களில் கடந்த ஆண்டு மார்ச் 24-ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஜூன் 8-ம் தேதி முதல் தினமும் 6 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே கடும் கட்டுப்பாடுகளுடன் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பின்னர், இது படிப்படியாக உயர்த்தப்பட்டது.

திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் மற்றும் விஷ்ணு நிவாசம் ஆகிய 2 இடங்களில் தினமும் 20 ஆயிரம் வரை இலவச தரிசன் டோக்கன்கள் வழங்கப்படுகிறது. இதுபோல, தினமும் ரூ.300 சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட்களும் வழங்கப்பட்டு வந்தது. இதுதவிர கல்யாண உற்சவம், வாணி அறக்கட்டளை, விஐபி தரிசன டிக்கெட் பெற்றவர்கள் என தினமும் 50 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசிக்கின்றனர். இந்நிலையில், ரத சப்தமி விழாவை முன்னிட்டு வரும் 19-ம் தேதி சுவாமியை தரிசிப்பதற்காக நேற்று 25 ஆயிரம் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்கள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டது. அதாவது கூடுதலாக 5 ஆயிரம் டிக்கெட்கள் வழங்கப்பட்டன. இந்த மாதம் முழுவதும் தினமும் 25 ஆயிரம் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்கள் வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனால் தற்போது திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

உண்டியல் வருவாய் அதிகரிப்பு

பக்தர்களின் வருகை கரோனாவுக்கு முன் இருந்தபடி ஆகி விட்டதால், சுவாமியின் உண்டியல் வருமானமும் அதிகரிக்க தொடங்கி விட்டது. தற்போது தினமும் ரூ.3 கோடிக்கு மேல் உண்டியல் வருமானம் வர தொடங்கியுள்ளது. இதேபோன்று, தலைமுடி காணிக்கையும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x