Published : 11 Feb 2021 03:13 AM
Last Updated : 11 Feb 2021 03:13 AM
அமராவதி: ஜெகன்மோகன் ரெட்டியால் தனது வீட்டில் உள்ள பெண்களையே சமாளிக்க முடியவில்லை. இவர் எப்படி மாநில பிரச்சினையை சமாளிப்பார்? என சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா, தெலங்கானாவில் புதிய கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு நேற்று கூறியதாவது:
தனது தங்கை புதிய கட்சி தொடங்கப் போவதாக கூறிய நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி இது தொடர்பாக இதுவரை வாய் திறக்காதது ஏன்? ஜெகன்மோகனுக்காக பாத யாத்திரை மேற்கொண்ட அவரது தங்கை, இப்போது புதிதாக கட்சி தொடங்க நினைப்பது ஏன்? ஜெகனின் சித்தப்பா கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இன்னமும் கொலைகாரர்களை கண்டுபிடிக்க இயலவில்லை. குற்றவாளிகளின் பக்கம் ஜெகன் இருப்பதால்தான் இவ்வழக்கு இழுபறியாக உள்ளது. ஜெகனின் சித்தப்பா மகளும் இவருக்கு எதிராக உள்ளார். தற்போது இவரை எதிர்த்து சொந்த தங்கையே மற்றொரு மாநிலத்தில் புதிய கட்சி தொடங்குகிறார். சொந்த வீட்டுப் பெண்களையே ஜெகனால் சமாளிக்க முடியவில்லை. இவர் எப்படி மாநில பிரச்சினைகளை எதிர்கொள்வார்? இவ்வாறு சந்திராபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT