Published : 10 Feb 2021 03:14 AM
Last Updated : 10 Feb 2021 03:14 AM
அமராவதி: ஆந்திர மாநிலத்தில் 4 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதல்கட்ட தேர்தல் 12 மாவட்டங்களில் நேற்று நடைபெற்றது. 2723 பஞ்சாயத்துகளில், 20,157 வார்டுகள், 18 வருவாய் வட்டாரங்களில் 168 மண்டலங்களில் இந்த தேர்தல் நடத்தப்பட்டது. காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 3.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
மதியம் 3.30க்கு வரிசையில் இருந்தவர்களுக்கு வாக்களிக்க அவகாசம் வழங்கப்பட்டது. பலத்த பாதுகாப்புடன் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. கட்சி சின்னம் இல்லாமல் பொது சின்னங்களில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். சில பஞ்சாயத்துகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். வாக்குப்பதிவு நடைபெற்ற இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. சில இடங்களில் மட்டும் தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. வாக்கு பெட்டியில் சிலர் தண்ணீரை ஊற்றி வாக்குப்பதிவை நிறுத்தியதால் மோதல் ஏற்பட்டது. முதல்கட்ட வாக்குப்பதிவில் 81.66 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் பஞ்சாயத்து துறை ஆணையர் கிரிஜா சங்கர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT