Published : 30 Jan 2021 03:15 AM
Last Updated : 30 Jan 2021 03:15 AM

பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படுவது மினி பட்ஜெட்டின் நீட்டிப்பு பிரதமர் நரேந்திர மோடி கருத்து

கடந்த ஆண்டில் கரோனா பாதிப்பால் மத்திய அரசு பல்வேறு கட்டங்களில் நிதி உதவிகளை அறிவித்தது. அதைப்போன்று மினி பட்ஜெட்டாகத்தான் வரும் மத்திய பட்ஜெட் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. வரும் நிதி ஆண்டுக்கான பொதுபட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி1-ம் தேதி நாடாளுமன்றத்தில்தாக்கல் செய்ய உள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாடாளுமன்றத்தில் கூறியதாவது:

வரும் பத்தாண்டுகளில் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க அடித்தளமிடும் பட்ஜெட்டாக இது இருக்கும். இந்த பட்ஜெட் கூட்டத் தொடரானது, இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக கடந்த ஆண்டில் (2020) 4 அல்லது 5 மினி பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்பட்டதைப் போன்று இது இருக்கும். அந்த வகையில் தற்போது தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் அதன் ஒரு பகுதியாகத்தான் இருக்கும்.

வரும் பத்தாண்டுகளின் முதலாவது நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியுள்ளது. இந்த பத்தாண்டானது மிகவும் முக்கியமானது. ஒளிமயமான எதிர்காலத்தை இந்தியாவுக்கு அளிப்பதன் தொடக்கமாக இது அமையும். இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த வீரர்களின் கனவை நனவாக்க இது மிகச் சிறந்த வாய்ப்பாகும். அந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடக்கூடாது.

இந்தக் கூட்டத் தொடரில் வரும் பத்தாண்டுகளில் வளமான இந்தியாவை உருவாக்குவதற்கு ஆரோக்கியமான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் நாடாளுமன்றத்துக்கு உள்ள பொறுப்பை நாம் தவறவிடக் கூடாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x