Published : 26 Dec 2020 03:14 AM
Last Updated : 26 Dec 2020 03:14 AM

அருணாச்சலபிரதேசத்தில் ஐஜத கட்சியின் 6 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்

இட்டாநகர்

அருணாச்சல பிரதேசத்தில் மொத்தம் 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு நடந்த தேர்தலில், பாஜக 41 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. அதன் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் (ஐஜத) 7 உறுப்பினர்களுடன் இரண்டாமிடம் பெற்றது.

இந்நிலையில், கட்சி விரோத செயல்பாட்டுக்கு விளக்கம் கேட்டு ஐஜத கட்சியின் 3 எம்எல்ஏ-க்களுக்கு கடந்த மாதம் கட்சித் தலைமை நோட்டீஸ் அனுப்பியது. மேலும் அவர்களை கட்சியில் இருந்தும் இடைநீக்கம் செய்தது. இதையடுத்து இவர்களுடன் மேலும் 3 எம்எல்ஏ-க்கள் சேர்ந்துகொண்டு 6 பேரும் தனி அணியாக செயல்பட்டு வந்தனர். இந்நிலையில், இந்த 6 பேரும் பாஜகவில் இணைந்தனர். இவர்களைத் தவிர அருணாச்சல் மக்கள் கட்சியின் ஒரே எம்எல்ஏவும் பாஜகவில் இணைந்தார். இதனை அம்மாநில சட்டப்பேரவை நேற்று அறிவித்தது. இதனால் சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் 41-ல் இருந்து 48 ஆக அதிகரித்துள்ளது.

எதிர்க்கட்சிகள் பலம் - காங்கிரஸ் 4, தேசிய மக்கள் கட்சி 4, ஐக்கிய ஜனதா தளம் 1, சுயேச்சைகள் 3 என 12 ஆக குறைந்துள்ளது.

பிஹாரில் பாஜகவுடன் இணைந்து நிதிஷ் குமார் ஆட்சி நடத்திவரும் நிலையில் அருணாச்சலில் அவரது கட்சி எம்எல்ஏ-க்களை பாஜக இணைத்திருப்பது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஐஜத கட்சியின் தேசியக்குழு கூட்டம் இவ்வார இறுதியில் நடைபெற உள்ளது. அப்போது இந்த விவகாரம் எதிரொலிக்கும் என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x