Published : 20 Nov 2020 03:14 AM
Last Updated : 20 Nov 2020 03:14 AM

காஷ்மீரில் லாரியில் மறைந்து வந்த 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீரில் லாரியில் மறைந்து வந்த தீவிரவாதிகள் 4 பேரை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் ஜம்மு - நகர் தேசிய நெடுஞ்சாலையில் நகர் நோக்கி லாரியில் பயணம் செய்தனர். இதுபற்றி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பான் டோல் பிளாசா அருகில் பாதுகாப்பு படையினர் காத்திருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.

பாதுகாப்புப் படையினர் லாரியை சோதிக்கத் தொடங்கிய போது, பதுங்கு குழி போன்ற கட்டமைப்பில் மறைந்திருந்த 4 தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர், கையெறி குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் காவலர்கள் இரண்டு பேர் படுகாயமடைந்தனர். அப்போது, பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 4 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து, ஜம்மு காவல் துறை அதிகாரி முகேஷ் சிங் கூறுகையில், ``துப்பாக்கிச் சூட்டில் நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்கள் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தைச் சோர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்கள் பயணித்த லாரி தீப்பிடித்து ஓரளவு சேதமடைந்துள்ளது. மேலும் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கிறார்களா என்பதைக் கண்டறிய அப்பகுதி முழுவதும் சோதனை நடந்து வருகிறது’’ என்று தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 31-ம் தேதியும் இதேபோன்று பான் டோல் பிளாசாவில் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x