Published : 31 Oct 2020 03:13 AM
Last Updated : 31 Oct 2020 03:13 AM

காஷ்மீரில் தீவிரவாதிகள் சுட்டதில் 3 பாஜக நிர்வாகிகள் உயிரிழப்பு

நகர்

காஷ்மீரில் பாஜக இளைஞர் அணி செயலாளர் உட்பட அக் கட்சி நிர்வாகிகள் 3 பேரை தீவிர வாதிகள் சுட்டுக் கொன்றனர்.

காஷ்மீர் யூனியன் பிரதேசத் தின் குல்காம் மாவட்டம் ஒய்.கே.போரா பகுதியைச் சேர்ந்த உமர்ரஷித் பேக், மாவட்ட பாஜக இளைஞரணி பொதுச்செயலாளராக இருந்தார். அப்பகுதியைச் சேர்ந்த உமர் ரம்சன் ஹஜீம் மற்றும் பிடாஹசன் யாதூ ஆகிய இருவரும்மாவட்ட பாஜக நிர்வாகிகளாக செயல்பட்டு வந்தனர்.

பாஜக நிர்வாகிகள் 3 பேரும் வியாழக்கிழமை இரவு ஒய்.கே.போரா பகுதியில் ஒரு காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்தக் காரை இடைமறித்த தீவிரவாதிகள் பாஜக நிர்வாகிகள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று படுகாயமடைந்த பாஜக நிர்வாகிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

படுகாயமடைந்தவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தாக்குதல் நடந்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் தப்பிச்சென்ற தீவிரவாதிகளை தேடி வருகின்றனர். இந்த ஆண்டில் மட்டும் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பாஜக நிர்வாகிகள் 9 பேர் இறந்துள்ளனர்.

இதுகுறித்து ஆளுநர் மனோஜ் சின்ஹா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பாஜக நிர்வாகிகளை சுட்டுக்கொன்றவர்கள் மனிதநேயத்தின் எதிரிகள். இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளை யாரும் நியாயப்படுத்த முடியாது’’ என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x