Published : 30 Oct 2020 03:13 AM
Last Updated : 30 Oct 2020 03:13 AM

கரோனாவில் இருந்து குணமடைவோர் 91% ஆக உயர்வு 9 நாட்களில் 1 கோடி பரிசோதனை மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

நாடு முழுவதும் கடந்த 9 நாட்களில் 1 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக மத்தியசுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே கரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை 91 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம்நேற்று வெளியிட்ட அறிக்கை:

நாட்டில் கரோனா பரிசோத னைக்கான கட்டமைப்பு வசதிகள் கடந்த ஜனவரி முதல்தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 10,75,760 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 10.65 கோடியை (10,65,63,440) கடந்துள்ளது. கடந்த 6 வாரங்களில் தினமும் சராசரியாக சுமார் 11 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொருநாளும் 15 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளும் திறனைநாடு பெற்றுள்ளது.

பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும்வேளையில் புதிய நோயாளிகள்எண்ணிக்கை குறைந்து வருகிறது. நாட்டில் கடந்த 9 நாட்களில் 1 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டதில் தினசரி புதியநோயாளிகளின் எண்ணிக்கை 4.64 சதவீதமாக குறைந்துள்ளது.

நாடு முழுவதும் நேற்று 49,881 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,40,203 ஆகஉயர்ந்துள்ளது. இதில் 73,15,989பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா வைரஸ்தொற்றில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை 90.99 சதவீதமாக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் 6,03,687பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 517 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,20,527 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் புதிதாக 6,738 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 16,60,766 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 14,86,926 பேர் குணமடைந்துள்ளனர். 1,30,286 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திராவில் புதிதாக 2,949 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 26,622 பேர் சிகிச்சையில் உள்ளனர். கர்நாடகாவில் புதிதாக 3,146 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அங்கு 68,180 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உத்தர பிரதேசத்தில் புதிதாக1,980 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 25,487 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரளாவில் நேற்று 7,020 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் 91,784 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லியில் புதிதாக 5,673 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. 29,378 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x