Published : 21 Sep 2021 03:18 AM
Last Updated : 21 Sep 2021 03:18 AM
பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி நேற்று பதவியேற்றார். இந் நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் ஆட்சி நடக்கும் பஞ்சாப் மாநிலத்தில் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும் மாநில காங்கிரஸ் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அமரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை கடந்த சனிக்கிழமை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, நீண்ட நேர குழப்பத்துக்குப் பிறகு புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி நேற்று முன்தினம் தேர்வு செய்யப்பட்டார். உடனடியாக ஆளுநர் மாளிகைக்கு சென்ற சரண்ஜித் சிங் சன்னி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆட்சி அமைக்க வருமாறு அவருக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
இதைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி நேற்று காலை பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் நடந்த எளிய நிகழ்ச்சியில் அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஓ.பி.சோனி, சுக்ஜிந்தர் ரந்தவா ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இவர்கள் இருவரும் துணை முதல்வராக பதவி வகிப்பார்கள்.
பதவியேற்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நவ்ஜோத் சிங் சித்து மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 59 வயதாகும் சரண்ஜித் சிங் சன்னி, சீக்கியர்களில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். அமரீந்தர் சிங் அமைச்சரவையில் தொழில்நுட்ப கல்வி அமைச்சராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள சரண்ஜித் சிங் சன்னிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ‘பஞ்சாப் முதல்வராக பதவியேற்ற சரண்ஜித் சிங் சன்னிக்கு வாழ்த்துகள். பஞ்சாப் மக்களின் முன்னேற்றத்துக்காக மாநில அரசாங்கத்துடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம்’ என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT