Published : 26 Jul 2021 03:12 AM
Last Updated : 26 Jul 2021 03:12 AM

ஓபிஎஸ், பழனிசாமி தனித்தனியாக டெல்லி பயணம் : பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷாவுடன் இன்று சந்திப்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் திடீரென நேற்று தனித்தனியாக டெல்லி புறப்பட்டுச் சென்றனர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை இன்று இருவரும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2019 மக்களவைத் தேர்தல் முதல், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்தது.

இந்தச் சூழலில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் நேற்று காலை 10.30 மணி அளவில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். அதுபோல, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி நேற்று இரவு கோவையில் இருந்து டெல்லி சென்றார்.

இருவரும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்திக்க இருப்பதாக அதிமுக எம்.பி. ஒருவர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் தெரிவித்தார். பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி உள்ளிட்டோரையும் அவர்கள் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள், நடப்பு அரசியல் சூழல், சசிகலா விவகாரம், மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவது, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வருமானவரித் துறை சோதனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த சந்திப்பின்போது ஆலோசிக்க உள்ளதாகத் தெரிகிறது. தமிழகத்தில் 3 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

மத்திய அமைச்சராகியுள்ள எல்.முருகன் 6 மாதங்களுக்குள் எம்.பி.யாக வேண்டும். எனவே, பாஜக தலைவர்கள் உடனான சந்திப்பின்போது மாநிலங்களவை இடைத்தேர்தல் குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

நீட் தேர்வு ரத்து, தடுப்பூசிகளை வழங்குவது, எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அப்போது அவர்கள் அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு பிரதமரை அதிமுக தலைவர்கள் சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x