Published : 08 Dec 2020 03:13 AM
Last Updated : 08 Dec 2020 03:13 AM
தமிழகத்தில் சாதிவாரியான முழுமையான புள்ளி விவரங்களை சேகரித்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைத்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பல காலகட்டங்களில் கோரிக்கைகள் விடுத்து வருகின்றன.
மேலும், அரசின் பல்வேறு நலத்திட்ட பயன் அனைத்து பிரிவினருக்கும் சென்றடைவதை உறுதிப் படுத்த வேண்டியுள்ளது. இதுதவிர உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகளை எதிர்கொள்ளத் தேவையான புள்ளிவிவரங்கள் பெற வேண்டியுள்ளது. இதனால், தற்போதைய நிலவரப்படி சாதிவாரியான புள்ளிவிவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் உரிய தரவுகளை சேகரித்து அறிக்கை சமர்ப்பிக்க அதற்கென பிரத்யேக ஆணையம் ஒன்று அமைக்கப்படும் என்று கடந்த டிச.1-ம் தேதி அரசால் உத்தரவிடப்பட்டது.
உடனடியாக செயல்பாட்டுக்கு வரும்
இதைத்தொடர்ந்து, தற்போதைய நிலவரப்படி சாதிவாரியான அளவிடக்கூடிய முழுமையான புள்ளிவிவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை முடிவு செய்து, அந்த புள்ளிவிவரங்களை திரட்டி அரசுக்கு அறிக்கை அளிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்படும்.இந்த ஆணையம் உடனடியாக செயல்பாட்டுக்கு வருவதுடன், விரைவில் அதன் பணியைத் தொடங்கும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்படும் இந்த அரசு, சமூகநீதியை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுக்கும்.
இவ்வாறு அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT