Published : 08 Dec 2020 03:13 AM
Last Updated : 08 Dec 2020 03:13 AM

புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை பகுதிகளில் புயல் பாதிப்புகளை 2-வது நாளாக மத்திய குழு ஆய்வு

புதுச்சேரி, கடலூர், வேலூர், மாவட்டங் களில் புயல், மழையால் ஏற்பட்ட சேதங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தமிழகத்தில் புயல் சேதத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ய, மத்திய அரசின் இணைச் செயலர் அசுதோஷ் அக்னிஹோத்ரி தலைமையிலான குழு தமிழகம் வந்துள்ளது. இந்தக் குழு 2-ஆக பிரிந்து ஆய்வு மேற்கொண்டது.

சென்னையில் ஆய்வுப் பணியை முடித்துவிட்டு நேற்று புதுச்சேரி வந்த ஒரு குழுவினர் பத்துக்கண்ணு, ராம நாதபுரம், புதுக்குப்பம், முதலியார் பேட்டை, தேங்காய்த்திட்டு ஆகிய பகுதிகளை பார்வையிட்டனர். புதுச்சேரி வளர்ச்சித் துறை ஆணையர் அன்பரசு, ஆட்சியர் (பொறுப்பு) பூர்வா கார்க் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளும் உடன் சென்றனர்.

புதுவை தலைமை செயலகத்தில் மத்திய குழுவினரை முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் சந்தித்து, நிவாரணத்தை உடனடியாக வழங்கும்படி கேட்டுக் கொண்டனர். பின்னர், துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை மத்திய குழுவினர் சந்தித்தனர்.

அதைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம் பூண்டியங்குப்பத்தில் மழை நீரில் மூழ்கிய வயல் பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிட்டனர். பாதிப்பு குறித்து அவர்களிடம் விவசாய சங்க பிரதிநிதிகள் விளக்கினர். மத்திய குழுவினருடன் கடலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப்சிங் பேடி, மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி மற்றும் அதிகாரிகள் சென்றனர்.

பின்னர் விழுப்புரம் மாவட்டத்தில் கலிஞ்சிகுப்பம், சொரப்பூர், வீரா ணம், விழுப்புரம் தாமரைக்குளம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர். அவர்களுடன் ஆட்சியர் அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்றனர். புயல் பாதிப்புகள் தொடர்பாக கடலூர், விழுப்புரத்தில் தனித்தனியே மாவட்ட நிர்வாகத்தினரால் வைக்கப்பட்டிருந்த புகைப்பட காட்சிகளையும் பார்வையிட்டு, மத்திய குழுவினர் மதிப்பீடு செய்தனர்.

இதேபோல் மற்றொரு குழுவினர் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வேலூர் மாவட்டத்தில் 3,475 ஏக்கர் பரப்பளவில் நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் 3,066 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5,732 ஏக்கர் பரப்பளவில் வேளாண் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால், 5,327 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x