Published : 28 Nov 2020 03:16 AM
Last Updated : 28 Nov 2020 03:16 AM

கால்நடைகள், வீடுகள் இழப்புக்கும் நிதியுதவி ‘நிவர்’ புயலால் உயிரிழந்த 4 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணங்களை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

‘நிவர்’ புயலால் உயிரிழந்த 4 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த நவ.25-ம் தேதி இரவு காரைக்கால் - மாமல்லபுரம் இடையே ‘நிவர்’ புயல் கரையைக் கடக்கும் என்றுவானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதையடுத்து, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் அரசு எடுத்தது. இதனால், உயிர்ச் சேதங்கள் பெருமளவில் தவிர்க்கப்பட்டன.

புயல் கரையைக் கடந்தபோது 18 மாவட்டங்களில் பலத்த காற்றுமற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்யும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தாழ்வான பகுதிகளில் வசித்தவர்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், பாய், போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. குடும்பம் ஒன்றுக்கு 10 கிலோ அரிசி, ஒருவேட்டி, ஒரு சேலை, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிரஒரு கிலோ பருப்பும், சமையல் எண்ணெய்யும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தபோதும், புயலால் எதிர்பாராமல் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ள செய்திஅறிந்து வருத்தமடைந்தேன். அவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.4 லட்சம், முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ.6 லட்சம் என தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும். புயலால் உயிரிழந்த 61 மாடுகளுக்கு தலா ரூ.30 ஆயிரம், 5 எருதுகளுக்கு தலா ரூ.25 ஆயிரம், 65 கன்றுகளுக்கு தலா ரூ.16 ஆயிரம், 114 ஆடுகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் உரிமையாளர்களுக்கு நிவாரணமாக வழங்கப்படும்.

புயல் காரணமாக 302 குடிசைகள், 38 ஓட்டுவீடுகள் முழுமையாகவும், 1,439 குடிசைகள், 161 ஓட்டு வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. இவற்றுக்கு உரிய நிவாரண உதவிவழங்கப்படும். 18 மாவட்டங்களில் வேரோடுசாய்ந்து விழுந்த 2,064 மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. 108 மின் மாற்றிகள், 2,927 மின் கம்பங்கள் விழுந்து சேதமடைந்துள்ளன. இவற்றை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மக்களுக்கு எந்தவித தொற்று நோயும் ஏற்படாமல் தடுக்க, 1,220 மருத்துவ முகாம்கள், 275 நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் 85,331 பேர் பயன்பெற்றுள்ளனர்.

சென்னை வேளச்சேரி, முடிச்சூர், வரதராஜபுரம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் அடிக்கடி வெள்ளநீர் தேங்கி, குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய திட்டங்களை வகுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். பயிர்ச் சேதத்தை முறையாக கணக்கிட்டு, பேரிடர் நிவாரண நிதியில்நிவாரணம் வழங்கவும், பயிர்க்காப்பீட்டுதிட்டத்தில் இழப்பீடு பெற்றுத்தரவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x