Published : 01 Nov 2020 03:13 AM
Last Updated : 01 Nov 2020 03:13 AM

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட பின்னர் புல்வாமா தீவிரவாத தாக்குதலின் உண்மை வெளிப்பட்டுவிட்டது எதிர்க்கட்சிகள் விமர்சித்ததை மறக்க முடியாது என பிரதமர் நரேந்திர மோடி உருக்கம்

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட பின்னர் புல்வாமாவில் நடந்த தீவிரவாதத் தாக்குதலின் உண்மை வெளிப்பட்டுவிட்டது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்த தாக்குதலின்போது எதிர்க்கட்சிகள் பேசியதை மறக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

சர்தார் வல்லபபாய் பட்டேல் பிறந்த தினம் நாடு முழுவதும் நேற்று கொண்டாடப் பட்டது. குஜராத் மாநிலம் கெவதியா நகரில் நிறுவப்பட்டுள்ள ஒற்றுமைக்கான சிலை மீது பிரதமர் மோடி பால் ஊற்றி, மலர்களை தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் மேளதாளங்கள் முழங்க கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதைத் தொடர்ந்து நடைபெற்ற பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.

அப்போது பிரதமர் பேசியதாவது:

ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி நடந்த தீவிர வாத தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு யார் காரணம் என்ற உண்மை, அண்டை நாட்டின் (பாகிஸ்தான்) நாடாளுமன்றத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. புல்வாமா தீவிரவாத தாக்குதல் நடந்த நேரத்தில் தேசமே சோகத்தில் மூழ்கி வீரமரணம் எய் திய வீரர்களுக்காக அஞ்சலி செலுத்தியது.

ஆனால், அந்த நேரத்தில் சிலர் தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக, அசிங்கமான அரசியல் செய்யும் நோக்கில் தேவையில் லாத கருத்துகளை பேசி மனதை புண் படுத்தினர். அவர்கள் அவ்வாறு பேசியதை நம்மால் எளிதில் மறந்துவிட முடியாது. அண்டை நாட்டின் நாடாளுமன்றம், புல் வாமா தீவிரவாத தாக்குதலுக்கான கார ணத்தை ஒப்புக்கொண்ட பிறகு, உண் மையை ஏற்றுக்கொண்ட பிறகு சிலரின் உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது.

அரசியல் லாபத்துக்காக சிலர் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை புல்வாமா தாக்குதலுக்குப் பின் நடந்த சம்பவங்கள் வெளிப்படுத்தின.

இதுபோன்று அரசியல் செய்யாதீர்கள். அது நமது தேசத்தை பாதுகாக்கும் வீரர் களின் தன்னம்பிக்கையை குலைத்துவிடும் என்று அரசியல் கட்சிகளிடம் கேட்டுக் கொள்கிறேன். தெரிந்தோ, தெரியாமலோ தேசவிரோத சக்திகளின் கரங்களில் நீங்கள் சிக்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

உலகிலுள்ள அனைத்து நாடுகளும் தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய நேரம் இதுவாகும். தீவிர வாதம், வன்முறை ஆகியவற்றால் ஒருவரும் பலனடைய முடியாது.

இந்தியா எப்பொழுதும் தீவிரவாதத் துக்கு எதிராகவே போராடி வருகிறது.

பல்வேறு துண்டுகளாக இருந்த இந்தி யாவை ஒன்று திரட்டி இன்று ஒரு உருவ மாக, பாரத தேசமாக மாற்றியவர் சர்தார் வல்லபபாய் படேல்தான். பல்வேறு சிற்றரசு களை ஒன்றாக இணைத்து நாட்டை கட்ட மைத்தவர் அவர். கடந்த 2014-ம் ஆண்டி லிருந்து படேல் பிறந்தநாளை கொண்டாடி வருகிறோம்.

இவ்வாறு மோடி பேசினார்.

கெவதியா – சபர்மதி இடையே நீர்வழி விமான சேவை

அகமதாபாத்: குஜராத்தின் கெவதியா நகரில் இருந்து அகமதாபாத்தின் சபர்மதி வரையிலான நீர்வழி விமான சேவையை (சீ பிளேன்) பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் சென்றார். அப்போது அவர், அங்குள்ள நர்மதை மாவட்டத்தின் கெவதியா நகரில் அமைக்கப்பட்டுள்ள ஆரோக்ய வனம், சிறுவர்களுக்கான ஊட்டச்சத்து பூங்கா, சர்தார் படேல் விலங்கியல் பூங்கா ஆகியவற்றை திறந்து வைத்தார்.

இந்நிலையில், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான வல்லபபாய் படேலின் 145-வது பிறந்தநாள் விழா கெவதியா நகரில் நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, கெவதியாவில் இருந்து அகமதாபாத்தின் சபர்மதி வரையிலான கடல் நீர்வழி விமான சேவையை தொடங்கி வைத்தார். பின்னர், அந்த விமானத்திலேயே அவர் சபர்மதி புறப்பட்டுச் சென்றார்.

அகமதாபாத் – கெவதியா இடையே, சபர்மதி நதி மார்க்கமாக இந்த நீர்வழி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பகுதிகள் இடையேயான 200 கி.மீ. தொலைவை சாலை வழியாக கடக்க வேண்டுமெனில் 4 மணி நேரம் செலவாகும். ஆனால், இந்த நீர்வழி விமானமானது வெறும் 45 நிமிடங்களிலேயே அந்த தொலைவைக் கடந்துவிடும். சுற்றுலாவையும், உள்ளூர் வர்த்தகத்தையும் ஊக்குவிக்கும் நோக்கில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விமான சேவைக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.1,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பாரதியின் கவிதையை பாடிய மோடி

குஜராத்தில் நேற்று நடைபெற்ற சர்தார் வல்லபபாய் பட்டேல் பிறந்த நாள் விழாவில் பிரதமர் மோடி பேசும்போது தேசியக்கவி பாரதியாரின் கவிதை வரிகளை குறிப்பிட்டார்.

"மன்னும் இமயமலை யெங்கள் மலையே மாநில மீதிது போற்பிறி திலையே.." எனத் தொடங்கும் பாடலில் உலகிலுள்ள மிக உயர்ந்த மலையாகிய இமயமலையை உடைய நாடு. வற்றாத கங்கை நதியை உடைய நாடு. வேதங்களை உடைய நாடு என்று பெருமை பொங்க கூறியுள்ளார் பாரதியார்.

இந்தியத் துணை கண்டத்தைக் காக்கும் இயற்கை பாதுகாப்பு அரணாக விளங்குவது இமயமலை. 6 நாடுகளில் பரந்து விரிந்துள்ளது. உலகின் பெயர்பெற்ற ஜீவநதிகளான சிந்து, கங்கை, யாங்சே போன்றவற்றின் பிறப்பிடம் இமயமலைதான். இமயமலையை தனியாக யாரும் சொந்தம் கொண்டாட வேண்டாம் என்று சொல்லும் வகையிலும் இந்தியாவின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் வகையிலும் உள்ள தேசியக்கவி பாரதியின் கவிதையை பிரதமர் மோடி மேற்கோள் காட்டிப் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x