Published : 10 Jun 2021 03:11 AM
Last Updated : 10 Jun 2021 03:11 AM

வாழும் காலத்திலேயே எழுத்தாளர்களின் வறுமையைப் போக்குவோம்! :

பேராசிரியர் அ.ராமசாமி எழுதிய ‘எழுத்தாளர்களுக்கென கிராமங்களை உருவாக்குவோம்’ கட்டுரை (07-06-21) படித்தேன். எழுத்தாளர்கள் கூடுமிடமாக, அங்கேயே தங்கி தங்கள் சிந்தனைகளை உருவாக்கும் இடமாக இதுபோன்ற கிராமங்கள் உதவும் என்ற கட்டுரையின் கருத்தை வரவேற்கிறேன். விருதாளர்களுக்கு வீடு வழங்கப்போகும் தமிழக அரசின் திட்டமும் வெகுவாகப் பாராட்டப்பட வேண்டும். பொதுவாகவே உயரிய விருதுகள் அனைத்தும் எழுத்தாளர்களின் ஓய்வுக் காலத்திலேயே தரப்படுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக தகுதி வாய்ந்த பல எழுத்தாளர்கள் இன்னமும் வறுமையிலேயே வாடுகிறார்கள். அவர்களின் எழுத்துகளை சில மாதாந்திர இலக்கிய இதழ்கள் மட்டுமே பிரசுரிக்கின்றன. தங்களை வருத்தி எழுதும் ஒரு கதையோ அல்லது கட்டுரையோ அவர்களின் குடும்பத்துக்கு எந்த உதவியையும் செய்யப்போவதில்லை. ஆனால், அவ்வெழுத்துகள் தமிழ் அறிவுச் சமூகத்தின் சொத்துகளாக மாறிவிடுகின்றன.

தமிழகத்தில் பல எழுத்தாளர்கள் இன்னமும் வாடகை வீட்டிலும், படிப்பதற்குப் புத்தகங்கள் வாங்குவதற்குக் கூட வசதிகளற்றும் வாழ்க்கை நடத்துகின்றனர். வீட்டு வாடகை செலுத்துவதற்கும், பிள்ளைகளின் படிப்பு செலவை சமாளிப்பதற்கும் அவர்கள் சிரமப்படுகிறார்கள். உயரிய விருதுகள் வாங்கிய பின் அவர்களுக்கு வீடு வழங்குவதற்கு முன்னர், ஏழை எழுத்தாளர்களின் வீட்டு வாடகைக்கும், அன்றாட வாழ்க்கைக்கும் தேவைப்படும் ஒரு மாதாந்திர உதவித்தொகையை தமிழக அரசு ஏற்படுத்தட்டும். எழுத்தாளர்களின் வறுமையை அவர்கள் வாழும் காலத்திலேயே போக்குவோம்.

- செ.சண்முகசுந்தரம், தஞ்சாவூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x