Published : 11 Dec 2021 03:07 AM
Last Updated : 11 Dec 2021 03:07 AM

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு 26-ஆக உயர்வு :

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் கடந்த மாதம் புதிய வகை கரோனா பரவுவது கண்டறியப்பட்டு அதற்கு‘ஒமைக்ரான்’ எனப் பெயரிடப்பட்டது. இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட ஒருசில வாரங்களிலேயே இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில் உட்பட 59 நாடுகளுக்கு பரவிவிட்டது.

இந்த வைரஸானது வேகமாகபரவக்கூடியது மட்டுமல்லாமல் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களையும் தாக்கும் திறன் படைத்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இருந்தபோதிலும், ஒமைக்ரான் தொற்றால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை என சமீபத்திய மருத்துவத் தரவுகள் மூலம் தெரியவந்திருக்கிறது.

இந்தியாவை பொறுத்தவரை, ராஜஸ்தானில் 9 பேர், கர்நாடகாவில் 2 பேர், குஜராத்தில் 3 பேர்,மகாராஷ்டிராவில் 10 பேர், டெல்லியில் ஒருவர் என இதுவரை மொத்தம் 25 நபர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது. இந்நிலையில், தன்சானியா நாட்டில் இருந்து கடந்த 4-ம் தேதி மும்பை வந்த 49 வயது நபருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது. அவர் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. இதையடுத்து, அவர் அங்குள்ளமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் முகக்கவசம் அணிபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருவது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் (சுகாதாரம்) எச்சரித்துள்ளார்.

86 சதவீதம் பேருக்கு தடுப்பூசி

இதற்கிடையே, மக்களவையில் உறுப்பினர்களின் துணை கேள்விகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா நேற்று பதில் அளிக்கும்போது,

‘‘நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜன. 16-ம்தேதி தொடங்கியது. இதுவரை தகுதி வாய்ந்தவர்களில் 86 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதை 100சதவீதமாக கொண்டு வர வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் விருப்பம். அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளைவிட தடுப்பூசி போடுவதில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது. தற்போது 7 கோடி டோஸ் தடுப்பூசிகள் மாநிலங்களிடம் கையிருப்பில் உள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x