Published : 30 Jul 2021 03:14 AM
Last Updated : 30 Jul 2021 03:14 AM
ஆகம விதிகளின்படி கோயில்களில் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்களை மட்டுமே அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் எனவும், தமிழில் அர்ச்சனை செய்ய எதிர்ப்பு தெரிவித்தும் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சென்னை சிஐடிநகரைச் சேர்ந்த எஸ்.தரன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இதில் 500 கோயில்களில் மட்டுமே ஆகம விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறது. ஆகம விதிகளின்படி குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கோயிலின் கர்ப்பக்கிரகத்துக்குள் நுழைந்து அர்ச்சனை, பூஜைகள் செய்ய முடியும்.
அரசின் அறிவிப்பு ஏற்புடையதல்ல
எனவே, ஆகம விதிகளை முறையாகக் கடைபிடிக்கும் கோயில்களில், குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே கோயில் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும். ஆனால் இதை மீறி அர்ச்சகர் பயிற்சி முடித்து விட்டால் ஆட்சியமைத்த 100 நாட்களில் அனைத்துசாதியினரையும் அனைத்து கோயில்களிலும் அர்ச்சகர்களாக நியமிப்போம் என தமிழக அறநிலையத் துறை அமைச்சர் தெரிவித்து இருப்பது ஏற்புடையதல்ல.
தமிழக அரசின் இந்த அறிவிப்பு குறிப்பிட்ட சமூகத்தினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். அதுபோல தமிழில் அர்ச்சனை செய்ய அனுமதித்தால் அதன் மூலமும் மற்ற சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை கோயில் கர்ப்பக்கிரகத்துக்குள் மறைமுகமாக அனுமதிப்பதுபோல் ஆகிவிடும்.
எனவே, தமிழில் அர்ச்சனை செய்ய தடை விதித்து, ஆகம விதிகளைக் கடைபிடிக்கும் கோயில்களில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமேஅர்ச்சகர்களாக நியமிக்க உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந் தார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.முத்துக்குமார் ஆஜராகி, ‘‘சிவாச்சாரியார்கள் தொடர்ந்த ஒரு வழக்கில் ஆகம விதிகளின்படி பயி்ற்சி முடித்தவர்கள் கோயில் அர்ச்சகர் ஆகலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே அதற்கு முரணாக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை ஆரம்பக் கட்டத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என கோரினார்.அதையடுத்து இதுதொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவுகளை ஆய்வு செய்துவிட்டு வாதங்களை முன்வைக்க மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT