Published : 20 Jun 2021 03:12 AM
Last Updated : 20 Jun 2021 03:12 AM
தமிழகத்தில் முகாமுக்கு வெளியில் வாழும் 13,553 இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு கரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் தங்கியிருக்கும் இலங்கை தமிழர்கள் பலர், முகாமுக்கு வெளியிலும் வசித்து வருகின்றனர். கரோனா பெருந்தொற்று காரணமாக இவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், முகாமுக்கு வெளியில் வாழும் 13,553 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு கரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்தை 5 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT