Published : 28 May 2021 06:40 AM
Last Updated : 28 May 2021 06:40 AM

ஊரடங்கு காலத்தில் விலங்குகளின் உணவுக்கு அரசு நிதி வழங்க நீதிமன்றம் அறிவுறுத்தல் :

கரோனா ஊரடங்கு காலத்தில் பசியால் வாடும் விலங்குகளுக்கு உணவு அளிப்பதற்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கரோனா 2-வது அலையின் தீவிரத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில் தெரு விலங்குகளுக்கு உணவு வழங்க உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனக் கோரி கோடம்பாக்கத்தைச் சேர்ந்த விலங்குகள் நல அறக்கட்டளை தலைவரான சிவா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுகுறித்து ஆய்வு செய்ய குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கால்நடைத்துறை சார்பில், நாய்கள் உள்ளிட்ட தெரு விலங்குகளுக்கு உணவு வழங்க ஏதுவாக ரூ.9 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘‘வாயில்லா பிராணிகளுக்காக ஒதுக்கப்படும் நிதி, முறையாக அவற்றுக்குச் செல்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இந்த நிதியை உடனடியாக விடுவிக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை மே 31-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x