Published : 27 May 2021 03:10 AM
Last Updated : 27 May 2021 03:10 AM

பள்ளி, கல்லூரிகளில் இணையவழி வகுப்பு தொடர்பாக - வழிகாட்டுதல்களை வெளியிட குழு அமைக்க முடிவு : மாணவர்கள் புகார் தெரிவிக்க உதவி எண் விரைவில் அறிவிப்பு

பள்ளி, கல்லூரிகளில் இணைய வகுப்புகள் குறித்து முறையான வழிகாட்டுல்களை வெளியிட அதிகாரிகள், உளவியல் நிபுணர்களை கொண்ட குழு மற்றும் மாணவ, மாணவியர் புகார் தெரிவிக்க உதவி எண் உருவாக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்று காரணமாக தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு, இணையம் வழியாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த வகுப்புகளின் செயல்பாடுகள் குறித்துசமீபத்தில் வரப்பெற்ற சில செய்திகளின் தன்மையைக் கருத்தில்கொண்டு, இணையவழி வகுப்புகளை முறைப்படுத்துவது, அதில்தவறுகள் நடக்கும்பட்சத்தில் அதன் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

முதல்வர் உத்தரவு

இதில், சமீபத்தில் இணைய வகுப்பு ஒன்றில் நடைபெற்ற சிலவிரும்பத்தகாத நிகழ்வுகள் குறித்தும் அதன் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறக்கூடாது என்றும் சட்டப்பூர்வமான நடவடிக்கை சம்பந்தப்பட்டவர்கள் மீது எடுக்கப்படும் என்றும், மற்ற பள்ளி, கல்லூரிகளில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க சில முடிவுகள் மற்றும் உத்தரவுகளை முதல்வர் வெளியிட்டுள்ளார். அதன்படி,

 இணைய வகுப்புகள் அந்தந்தபள்ளியால் பதிவு செய்யப்படவேண்டும். இப்பதிவை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம்மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் இருவரைக் கொண்ட குழு அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.

 இணையவழி வகுப்புகள் நடத்துவது தொடர்பாக முறையான வழிகாட்டுதல்களைவகுத்து வெளியிட பள்ளிக்கல்வி ஆணையர், கல்லூரிக் கல்வி இயக்குநர், கணினிகுற்றத் தடுப்பு பிரிவு மற்றும்பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்தொடர்பான காவல் அலுவலர்கள், கல்வியாளர்கள், உளவியல் நிபுணர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும்.

பாலியல் தொல்லையை தடுக்க...

 அக்குழு மாநிலத்தில் உள்ளபள்ளிகள் மற்றும் கல்விநிறுவனங்களில் பாலியல் தொல்லைகள் தரப்படுவதை தடுக்க உரிய வழிமுறைகளை பரிந்துரைக்கவும், இணையவழி வகுப்புகளை நெறிப்படுத்துவது குறித்தும் வழிகாட்டுநெறிமுறையினை ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

 இணைய வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்துகொள்வோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ, மாணவிகள் தங்கள் புகார்களைத் தெரிவிக்க ஓர் உதவி எண்ணை உருவாக்க வேண்டும்.

மேலும் இணைய வகுப்புகள் குறித்து வரும் புகார்களை மாநிலத்தின் கணினி குற்றத் தடுப்புக் காவல் பிரிவில், காவல் கண்காணிப்பாளர் நிலையில் உள்ள அலுவலர் உடனடியாகப் பெற்று சம்பந்தப்பட்ட மாணவ,மாணவியருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் விசாரித்து துரிதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் முதல்வர்உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இணைய வகுப்புகள் அந்தந்த பள்ளியால் பதிவு செய்யப்பட வேண்டும். இப்பதிவை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் இருவரைக் கொண்ட குழு அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x