Published : 11 Mar 2021 03:12 AM
Last Updated : 11 Mar 2021 03:12 AM

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள் - வாக்களிக்க போதிய அவகாசம் வழங்க வேண்டும் : தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாக்களிக்க போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் அதன் நிறுவனர் மாயவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் வரும் ஏப்.6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்படும் தபால் வாக்குகளை பதிவு செய்வதில், பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.

கடந்த மக்களவைத் தேர்தலின்போது 4.35 லட்சம் அரசு ஊழியர்களில் 3.97 லட்சம் பேர் மட்டுமே தபால் மூலமாக வாக்களித்தனர். 37,712 பேர் தபால் வாக்குகளை செலுத்த முடியவில்லை. வாக்கு களை செலுத்தியவர்களில் 24,912பேரின் வாக்குச்சீட்டுகள் அதிகாரிகளின் அத்தாட்சி கையெழுத்து இல்லாமல் நிராகரிக்கப்பட்டது. இதன்மூலம் மொத்தம் 62,624 பேரின் தபால் வாக்குகள் வீணாகி விட்டன.

தற்போது தமிழகம் முழுவதும் கரோனா தொற்று காரணமாக வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை 90 ஆயிரமாக அதிகரிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் தேர்தல் பணியில் சுமார் 6 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்நிலையில், நூறு சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்யும் வகையில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறித்த முழுமையான விவரங்களையும் வெளியிட வேண்டும். மேலும், தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன்பாக, தொடர்புடைய தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமாக தங்களின் வாக்குகளை பதிவு செய்ய ஏதுவாக தனி வாக்குச்சாவடிகளை அமைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதிசஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “சொந்த தொகுதிக்கு வெளியே தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மின்னணு இயந்திரம் மூலமாக வாக்களிக்க அனுமதி வழங்க இயலாது. அவர்கள் தபால் மூலமாகவே வாக்களிக்க இயலும்” என தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதையடுத்து, போதுமான ஊதியம் இல்லாமல் துணிச்சலாக தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அவர்களின் ஜனநாயக அடிப்படை உரிமையான வாக்குரிமையை மறுக்கக்கூடாது என அறிவுறுத்திய நீதிபதிகள், அவர்கள் தபால் மூலம் வாக்களிக்க போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். மேலும் இதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x